உத்திரமேரூர், டிச.10: உத்திரமேரூர் அருகே உள்ள கிராமங்களில் அறுவடை செய்ய முடியாதபடி மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்களால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். உத்திரமேரூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை சாலையோரங்களில் இருபுறமும் மழைநீர் கால்வாய்கள் இருந்தன. இதன் மூலம் மழைநீர், நீர்நிலைகளுக்கு செல்ல ஏதுவாக இருந்தது. இந்த கால்வாய்கள், முறையாக பராமரிக்காமல் விட்டதால், பெருமளவு ஆக்கிரமிப்பில் சிக்கியும், தூர்ந்து போயும் காணப்படுகிறது.
இதனால், மழை பெய்தாலும் உத்திரமேரூர் சுற்றியுள்ள ஏரி, குளம், குட்டை என எந்த நீர்நிலைகளிலும் முறையாக மழைநீர் செல்லாமல், நீர்நிலைகள் அனைத்தும் வறண்டு காணப்படுகின்றன. இதனால் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமலும், பொது மக்கள் குடிநீர் பற்றாக்குறையாலும் தொடர்ந்து தவித்து வருகின்றனர்.கடந்த சில நாட்களில் பெய்த பலத்த மழையால், மாவட்டத்தில் பல ஏரிகள் நிரம்பியுள்ளன. ஆனால் உத்திரமேரூர் ஒன்றியத்தில் மட்டும் பெருமளவு ஏரிகள் நிரம்பாமல் வறண்டு கிடக்கின்றன. மழையின் அளவு கனிசமாக இருந்தாலும் மழைநீர் வீணாக வெளியேறி விவசாய நிலங்கள் வழியே செல்கிறது. இதையொட்டி, விவசாயிகளின் பயிர்கள் மழை நீரில் மூழ்கி பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.