செங்கல்பட்டு, டிச.5: செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துள்ளது. அதில், ஒரு சில ஏரிகளில் தண்ணீர் நிரம்பாததால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், செங்கல்பட்டு, மறைமலைநகர், சிங்கப்பெருமாள் கோயில் ஆகிய பகுதிகளில் மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஆறாக ஓடியது. மழைநீர் கால்வாய்களில் அடைப்பு மற்றும் ஆக்கிரமிப்பு காரணத்தால் சாலைகள் மற்றும் தெருக்களில் மழைநீர் குளம்போல் தேங்கியது.மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித் துறைக்கு சொந்தமான ஏரிகள், ஒன்றிய கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள் வேகமாக நிரம்பின. விவசாயத்துக்கு நீர் ஆதாரமாக விளங்கும் மிகப்பெரிய ஏரிகளில் கனமழை பெய்தும், தண்ணீர் நிரம்பவில்லை. இதனால், விவசாயிகள் பெரும் வேதனை அடைந்துள்ளனர்.மாவட்டத்தின் 6வது பெரிய ஏரியான பொன்விளைந்த களத்தூர் ஏரியின், முழு கொள்ளளவு 15 அடி. தற்போது, பெய்த மழையில், 12அடி வரை தண்ணீர் நிரம்பியுள்ளது. செங்கல்பட்டு நீஞ்சள் மடு அணையில் இருந்து களத்தூரான் கால்வாய் மூலம் பொன்விளைந்த களத்தூர் ஏரிக்கு மழைநீர் செல்லாததால், ஏரி முழுமையாக நிரம்பவில்லை. இதற்கு காரணம் நீஞ்சள் மடு அணையில் நிரம்பிய மழைநீரை, ஏரிக்கு அனுப்பாமல் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வீணாக ஆற்றில் திறந்து விட்டனர்.