சீர்காழி, நவ.27:சீர்காழி சட்டநாதர் கோயில் எதிரே குளம்போல் மழைநீர் தேங்கி கிடப்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.சீர்காழி நகர மையப்பகுதியில் சட்டநாதர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் திருநிலை நாயகி பிரம்மபுரீஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றார். மேலும் காசிக்கு இணையான அஷ்டபைரவர் தனி சன்னதியில் எழுந்தருளி உள்ளனர். இக்கோயிலில் அமைந்துள்ள பிரம்ம தீர்த்தக் குளக்கரையில் திருஞானசம்பந்தருக்கு பார்வதி அம்பாள் ஞானப்பால் வழங்கிய தலமாகும். இத்தகைய புகழ்வாய்ந்த கோயிலுக்கு தினந்தோறும் உள்ளூர் மற்றும் வெளியிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்நிலையில் கோயிலின் தெற்கு கோபுர வாசல் எதிரே மழைநீர் குளம் போல் பல நாட்களாக தேங்கி நிற்கிறது.