தஞ்சை, நவ. 22: தஞ்சை பெரிய கோயிலில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள கும்பாபிஷேக விழாவுக்கான முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் கோவிந்தராவ் ஆய்வு செய்தார். உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோaயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தினம்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோயிலில் 1997ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதன்பின்னர் 23 ஆண்டுகளுக்கு பிறகு அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. தொல்லியில் துறை சார்பில் பெரிய கோயிலில் உள்ள கோபுரங்கள் சுத்தப்படுத்தும் பணி, புல்வெளி சீரமைப்பு, கல்தளம் பதிக்கும் பணி, கோயில் வளாகத்தில் சிதிலமடைந்த தரைதளம் சீரமைக்கும் பணி, திருச்சுற்று மண்டபங்கள் சீரமைக்கும் பணி, பெரிய கோயில் விமான கோபுரம் சுத்தப்படுத்தும் பணி, முருகன் சன்னதியில் உள்ள கோபுரம், விநாயகர் கோபுரம் சுத்தப்படுத்தப்பட்டன. இதர பணிகளும் நடந்து வருகின்றன.