திட்டக்குடி, நவ. 22: திட்டக்குடி கோட்டத்திற்கு உட்பட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் திட்டக்குடியில் நடந்தது.
மேற்பார்வை பொறியாளர் சத்திய நாராயணன் கலந்து கொண்டு, மனுக்களை பெற்றார். மின் நுகர்வோர் மற்றும் வணிகர்கள் மின் சப்ளை சம்பந்தப்பட்ட பிரச்னைகள் குறித்து மனுக்களை கொடுத்தனர். இந்நிலையில், கடலூர் மாவட்ட சட்ட பஞ்சாயத்து இயக்கத்தினர் மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள் மின் வாரிய ஊழியர்கள் அடையாள அட்டை போட வேண்டும். அலுவலகத்தின் முன் லஞ்ச ஒழிப்பு துறையின் தகவல் பலகை வைக்க வேண்டும். ஊழியர்கள் யூனிபார்ம் அணிய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கோவிந்தசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து உதவி செயற்பொறியாளர்கள் வில்வனேஷ்வரன், சக்திவேல் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பிரச்னை குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக மேற்பார்வை பொறியாளர் சத்தியநாராயணன் உறுதியளித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.