மதுராந்தகம், நவ.19: மதுராந்தகம் நகராட்சி மாம்பாக்கம் காட்டு காலனி சாலையில், ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும் குழியமாக போக்குவரத்துக்கு லயக்கற்ற நிலைக்கு மாறிவிட்டது. இச்சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.மதுராந்தகம் நகராட்சி 23வது வார்டு மாம்பாக்கம் பகுதியில் உள்ள காட்டு காலனியில் சுமார் 300 பேர் கொண்ட 80 குடும்பங்கள் உள்ளன. இவர்களது போக்குவரத்துக்காக கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லப்படும் வீராணம் குடிநீர் திட்ட பைப்லைன் அமைக்கப்பட்டுள்ள பகுதியை ஒட்டி சாலை அமைந்துள்ளது.இந்த சாலை, ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன் தார்ச்சாலையாக அமைத்து, முறையாக பராமரிக்காததால், தற்போது ஜல்லி கற்கள் பெயர்ந்து மண் சாலையாக மாறிவிட்டது. இதனால், பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் லாயக்கற்ற நிலையில் உள்ளது. இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், கடும் சிரமம் அடைகின்றனர்.