திருப்போரூர்: அதிக வாகன போக்குவரத்தால், சிறுசேரி - மேடவாக்கம் சாலை குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.சென்னை, சோழிங்கநல்லூரை அடுத்து வளர்ந்து வரும் புறநகர் பகுதியாக சிறுசேரி உள்ளது. பழைய மாமல்லபுரம் சாலையை ஒட்டி அமைந்துள்ளதால் ஏராளமான வீட்டுமனைப் பிரிவுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் உருவாகி வருகின்றன.மேலும், இங்கிருந்த 800 ஏக்கர் விவசாய நிலம் சிறுசேரி தகவல் தொழில்நுட்ப பூங்காவாக மாற்றப்பட்டு, 50க்கும் மேற்பட்ட மென்பொருள் நிறுவனங்கள் கட்டப்பட்டுள்ளன. தற்போது குக்கிராமமாக இருந்த சிறுசேரி, சென்னைக்கு இணையான வளர்ச்சியோடு காணப்படுகிறது. இதனால் 24 மணி நேரமும் வாகனப் போக்குவரத்து ஏற்பட்டுள்ளது.இங்கு புதிய கட்டுமான பணிகள் நடப்பதால், ஏராளமான கனரக வாகனங்களும் செல்கின்றன. பழைய மாமல்லபுரம் சாலையில் இருந்தும், வண்டலூர் - கேளம்பாக்கம் சாலையில் இருந்தும் சிறுசேரி செல்ல சாலைகள் உள்ளன. ஆனாலும் கிண்டி, வேளச்சேரி, பள்ளிக்கரணை, மேடவாக்கம் ஆகிய பகுதிகளில் இருந்து மென்பொருள் பூங்காவுக்கு வரும் வாகனங்கள் சித்தாலப்பாக்கம், காரணை, தாழம்பூர் வழியாக சிறுசேரி மற்றும் புதுப்பாக்கம் வரை செல்லும் மற்றொரு பிரதான சாலையை பயன்படுத்துகின்றன.