சாதாரண மழைக்கே சகதியாக மாறிய ராமச்சந்திரபுரம் சாலை

வத்திராயிருப்பு, நவ.8: வத்திராயிருப்பு அருகே மழைக்கு சாலை சேறும் சகதியுமாக மாறிவிட்டதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.

வத்திராயிருப்பு அருகே ராமச்சந்திரபுரம் ஊராட்சி உள்ளது. இதன் அருகிலேயே ரெங்கப்பநாயக்கர்பட்டி ஊராட்சி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மழையால் ராமச்சந்திரபுரம் மெயின் பஜாரில் மழைநீர் தேங்கி சகதி ஏற்பட்டு உள்ளது. ராமச்சந்திரபுரத்திலிருந்து ரெங்கப்பநாயக்கர்பட்டி, கீழக்கோபாலபுரம் செல்லக்கூடிய இந்த மெயின் சாலையில் சகதி ஏற்பட்டு உள்ளதால் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

பள்ளிகளுக்கு வந்து செல்லும் மாணவ, மாணவிகள் நடந்து வரும்போது கால் இடறி கீழே விழ வேண்டி நிலையுள்ளது. அதோடு வாகனங்கள் அடிக்கடி சகதியில் சிக்கிக் கொள்கின்றன. எனவே இந்த சாலையே உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மக்கள் கூறுகையில், சாலையில் சகதி ஏற்பட்டு வருவதால் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இந்த சாலையில் புதிதாக தார்ச்சாலை போடுதற்கான ஏற்பாடுகளை உடனடியாக செய்ய வேண்டும். இந்த சாலையே போட தவறினால் போராட்டத்தில் இறங்குவோம் என தெரிவித்துள்ளனர்.

Related Stories: