தெலுங்கு வருடப்பிறப்பை முன்னிட்டு ஆறு தெய்வங்கள் ஒன்றாக தரிசனம் ஆண்டாள் கோயிலில் பக்தர்கள் பரவசம்

வில்லிபுத்தூர், மார்ச் 20: தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு வில்லிபுத்தூர் கோயிலில் ஆண்டாள், ரெங்க மன்னார், கருடஆழ்வார், பெரிய பெருமாள், தேவி, பூமாதேவி ஆகியோர் ஒன்றாக காட்சி அளித்தனர். வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வருடத்திற்கு மூன்று முறை ஆண்டாள், ரெங்க மன்னார், கருட ஆழ்வார், பெரிய பெருமாள், பூமாதேவி, தேவி ஆகியோர் ஒன்று சேர்ந்து காட்சியளிப்பார்கள். அதாவது தீபாவளி பண்டிகை, தெலுங்கு வருட பிறப்பு, கைசிக ஏகாதேசி ஆகிய மூன்று தினங்களில் மட்டும் ஒன்று சேர்ந்து காட்சி அளிப்பார்கள்.

நேற்று தெலுங்கு வருடப்பிறப்பு என்பதால் வில்லிபுத்தூர் கோவிலில் தெய்வங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து காட்சி அளித்தனர். இதற்காக ஆண்டாள் கோயில் வளாகத்தில் உள்ள பெரிய பெருமாள் சன்னதியில் இருந்து பெரிய பெருமாள், தேவி, பூமாதேவி ஆகியோர் மேளதாளங்கள் முழங்க ஆண்டாள் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டனர். பின்னர் ஆண்டாள், ரெங்க மன்னார், கருடாழ்வார், பெரிய பெருமாள், தேவி, பூமாதேவி ஆகியோருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். தெய்வங்கள் ஒன்று சேர்ந்து இருப்பதை காணவும் சாமி தரிசனம் செய்யவும் விருதுநகர் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் நேற்று ஆண்டாள் கோயிலுக்கு திரண்டு வந்திருந்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி சக்கரை அம்மாள், கோயில் கண்காணிப்பாளர் அர்ஜூன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Related Stories: