கடலூர், நவ. 6: கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் ஆழ்துளை கிணறுகள் அமைப்பது மற்றும் பாதுகாப்பற்ற ஆழ்துளை கிணறுகளை மூடுவது தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை மேற்கொள்பவர்களுடன் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர் இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அன்புச்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது: கடலூர் மாவட்டத்திலுள்ள மூடப்படாத அனைத்து ஆழ்துளை கிணறுகளை விரைந்து மூட வேண்டும். மேலும் ஆழ்துளை கிணறு அமைக்கும் உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் பெயரில் ரூ.15 ஆயிரத்திற்கான வங்கி வரைவோலையுடன் படிவம் விண்ணப்பித்து பதிவு சான்று பெற்றுக்கொள்ள வேண்டும். பொதுமக்கள் தங்கள் இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைப்பதற்கு அப்பகுதி வட்டார வளர்ச்சி அலுவலர் தனிநபர் கிராம ஊராட்சிகள் அலுவலர்களிடம் ரூ.5 ஆயிரத்திற்கு பணம் செலுத்தி அனுமதி சான்று பெற்றிருக்க வேண்டும். ஆழ்துளை கிணறு அமைக்கும் தொழிலாளர்களை தனிநபர் அணுகும்போது ஆழ்துளை கிணறு அமைப்பதற்கான சான்று அத்தனிநபர் வைத்துள்ளனரா என்பதை உறுதி செய்த பின்னரே பணியை மேற்கொள்ள வேண்டும்.