இளையான்குடி, நவ.5: சாலைக்கிராமத்தில் விதிமீறிய டாஸ்மாக் கடைகளுக்கு இடம் தேர்வு செய்யாமல் இழுத்தடிப்பதாக மாதர் சங்கம் பகிரங்கமாக புகார் தெரிவித்துள்ளது. இளையான்குடி அருகே சாலைக்கிராமத்தில் மக்கள் கூடும் இடங்களான பஸ் ஸ்டாண்டிலும், குடியிருப்பு பகுதியிலும் விதிமீறி இரண்டு டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளுக்கு வரும் குடிமகன்களின் தொந்தரவால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்ட முடிவில் வருவாய்த்துறை மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடனடியாக இடம் தேர்வு செய்யப்பட்டு, கடைகள் அப்புறப்படுத்தப்படும் என உறுதியளித்தனர்.