கூடுவாஞ்சேரி, அக்.31: கொளப்பாக்கம் - ஊனமாஞ்சேரி சாலையோரத்தில், முறையான கால்வாய் வசதி இல்லாததால், சாலையில் மழைநீர் தேங்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் ஊனமாஞ்சேரி ஊராட்சியில் ஊனமாஞ்சேரி, கொளப்பாக்கம், சமத்துவபுரம், போலீஸ் அகாடமி, வசந்தாபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.இதில், ஊனமாஞ்சேரியில் இருந்து கொளப்பாக்கம் செல்லும் 2 கிமீ தூரம் கொண்ட சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக குண்டும், குழியுமாகவும், மழை காலத்தில் சேறும் சகதியுமாகவும் காணப்படுகிறது. மேலும், இந்த சாலையின் இருபுறமும் தனியார் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. ஆனால், இச்சாலையில் முறையான கால்வாய் வசதி இல்லை. இதனால், தற்போது பெய்து வரும் மழைநீர் செல்ல வழியில்லாமல் சாலையிலேயே தேங்குகிறது.