செய்யூர், அக்.24: செய்யூர் பகுதியில் புதிய தீயணைப்பு நிலையம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்து, அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படாததால் தீயணைப்பு நிலையம் வாடகை கட்டிடத்தில் இயங்குகிறது. இதனால், தீயணைப்பு வீரர்கள் அவதியடைந்து வருகின்றனர். மதுராந்தகம் தாலுகாவில் இருந்து செய்யூர் தொகுதி தனி தாலுகாவாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பிரிக்கப்பட்டது. இதையடுத்து, செய்யூர் தாலுகாவில் தனி நீதிமன்றம், அரசு கல்லூரிகள் மற்றும் அரசு துறை சார்ந்த கட்டிடங்கள் அமைத்து தர வேண்டும் என செய்யூர் மக்களின் கோரிக்கையாக உள்ளது. அதில், தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்பதும் ஒன்றாகும். செய்யூர் பகுதியில் உள்ள, வேளண் துறை விதை கிடங்கு சொந்தமான பழைய அரசு கட்டிடத்தில் தீயணைப்பு நிலையம் கடந்த 3 ஆண்டுகளாக இயங்குகிறது. இப்பகுதியில், கைவிடப்பட்ட வேளாண் துறை அரசு கட்டிடத்தை, மறு புனரமைப்பு செய்து அதில் தனி நீதிமன்றம் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.