நாகர்கோவில், அக்.23: நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் போலீசாரின் அதிகார துஷ்பிரயோகத்தையும் மீறி காங்கிரஸ் வெற்றி பெறும் என்று வசந்தகுமார் எம்.பி தெரிவித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பிறந்த தினத்தையொட்டி நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வசந்தகுமார் எம்.பி கலந்து கொண்டு இனிப்பு வழங்கினார். தனது பாராளுமன்ற செயல்பாடுகள் தொடர்பான புத்தகம் ஒன்றையும் அவர் வெளியிட்டார். பின்னர் வசந்தகுமார் எம்.பி நிருபர்களிடம் கூறியதாவது : நாங்குநேரி சட்டமன்ற தேர்தல் பிரசாரம் முடிந்தபிறகு நாகர்கோவில் வருவதற்காக பாளையங்கோட்டையில் இருந்து சேரன்மாதேவி, பணக்குடி சாலையில் வரலாம் என்றிருந்தேன். வரும் வழியில் என்னை தடுத்து டி.எஸ்.பி. வலது பக்கமாக திரும்பி பாளையங்கோட்டைக்கு செல்லுங்கள் என்றார். அவ்வாறு சொன்னவர் திரும்பவும் வேனை எடுத்து வந்து முன்னால் வந்து என்னை போகவிடாமல் நிறுத்தினார். முன்னும் பின்னும் போகவிடாமல் போலீசார் தடுத்தனர். அதன் பிறகு யாரிடமோ தொடர்பு கொண்டு உத்தரவு பெற்றார். எனது வாகனத்தில் போலீசை அழைத்துச் செல்ல கூறினார். முன்னும் பின்னும் போலீஸ் வாகனத்துடன் என்னை நாங்குநேரி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். என் மீது வழக்குப்போட்டதாக சொன்னார்கள். நான் பணம் கொடுத்ததை நீங்கள் பார்த்தீர்களா? என்றேன். சாலையில் போன எம்.பி.யை அவர்கள் கைது செய்து நாங்குநேரி ஸ்டேஷனில் 4 மணிநேரம் வைத்திருந்தார்கள். ஜனநாயகத்தை மீறி தமிழக போலீசார் இப்படி நடந்து கொண்டனர். என்னிடம் இருந்தவர்களிடம் கையெழுத்து வாங்கினார்கள். அதிமுக வெற்றிபெற வாய்ப்பு இல்லாததால் வசந்தகுமாரை தடுத்து நிறுத்தி காங்கிரஸ் வெற்றியை தடுக்கலாம் என நினைத்தார்கள். எனது கைதால் கை சின்னத்திற்கு வாக்காளர்கள் வாக்களித்தனர். எப்.ஐ.ஆர். காப்பி வந்ததும் கட்சி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கும்.