திருப்போரூர், அக்.17: திருப்போரூர் ஒன்றியத்தில் உள்ள காயார் கிராமத்தில் ஆடேரீஸ்வரர் கோயில் மற்றும் வரதராஜப் பெருமாள் கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களுக்கு சுமார் 10 ஏக்கர் 52 சென்ட் நிலங்கள் உள்ளன. இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களையும் அவற்றுக்கு சொந்தமான நிலங்களையும் திருப்போரூர் கந்தசுவாமி கோயில் நிர்வாகம் சேர்ந்து கவனித்து வருகிறது.இந்நிலையில், வரதராஜப் பெருமாள் கோயில் நிலம் கடந்த 25 ஆண்டு காலமாக கவனிப்பாரற்று இருந்ததால், தனியார் ஆக்கிரமித்து அனுபவித்து வந்தனர். இதையடுத்து காயார் கிராம மக்கள் இந்த ஆக்கிரமிப்பை அகற்றி கோயிலுக்கு கையகப்படுத்த வேண்டும் என கலெக்டர் மற்றும் இந்து அறநிலையத்துறை உதவி ஆணையருக்கு மனுக்கள் அனுப்பினர்.இதை தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நிலம் கையகப்படுத்தப்பட்டு, தற்போது ஆண்டு ரொக்க குத்தகைக்கு விடப்படுகிறது. இதையொட்டி, கடந்த ஆண்டு சுமார் ₹47 ஆயிரத்துக்கு நிலம் குத்தகைக்கு விடப்பட்டு, அறநிலையத்துறைக்கு வருவாய் கிடைத்தது.