சென்னை, அக். 15: மாமல்லபுரத்திற்கு இரு தலைவர்கள் வருகைக்கு பின்பு, சுற்றுலா பயணிகள் தொடர்ந்து படையெடுத்து வருவதால், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், புல்தரைகள் தண்ணீர் இன்றி காய்ந்தும், சுற்றுலாப் பயணிகள் புல்தரை அமர்வதாலும் சேதமடைந்து வருவதை பாதுகாக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் மாமல்லபுரம் வந்து சென்றதையடுத்து நேற்று முன்தினம் முதல் சுற்றுலா பயணிகள் வர தொடங்கினர். அதேபோல், நேற்றும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வேன், கார், பைக் ஆகியவைகளில் வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதற்கு காரணம், இரு தலைவர்கள் வந்ததையொட்டி, மாமல்லபுரத்தில் அமைக்கப்பட்டிருந்த அழகிய மின் விளக்கின் தோற்றம் பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. இதனால், இந்த எழில் மிகு தோற்றத்தை பார்ப்பதற்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். ஆனால், பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் வந்து சென்ற பிறகு அந்த அழகிய மின் விளக்குகளை அணைத்து விட்டனர்.