காஞ்சிபுரம், அக். 15: காஞ்சிபுரம் அருகே ராஜகுளம் - ஏனாத்தூர் சாலையில் பெண் மருத்துவரிடம் கத்தியைக் காட்டி மர்ம நபர்கள் 24 சவரன் நகைகளை பறித்துச் சென்றனர். காஞ்சிபுரம் மளிகை செட்டி தெருவை சேர்ந்தவர் மருத்துவர் அஞ்சலி (51). ஸ்ரீபெரும்புதூரில் கிளினிக் நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு கிளினிக்கில் பணி முடித்துவிட்டு காரில் காஞ்சிபுரம் நோக்கி திரும்பி வந்தார். காரை சவுந்தரராஜன் என்ற டிரைவர் ஓட்டி வந்தார். அப்போது ராஜகுளத்தில் இருந்து ஏனாத்தூர் சாலை வழியாக காஞ்சிபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தபோது, டூவீலரில் வந்த மர்ம நபர்கள் 3 பேர் காரை வழிமறித்து நிறுத்தினர். காரை நிறுத்தியதும் கண்ணாடிகளை உடைத்து மருத்துவர் அஞ்சலியிடம் இருந்த 24 சவரன் தங்க நகைகளை கத்திமுனையில் பறித்து சென்றனர்.