மன்னார்குடி, அக்.15: பிரதம மந்திரியின் விவசாயிகள் கவுரவ ஊக்கத் தொகை திட்டம், பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தில் இணைந்துள்ள விவசாயிகள் மூன்றாவது தவணைத் தொகை பெறுவதற்கு ஆதார் அட்டையில் உள்ளவாறு பெயர் திருத்தம் செய்து கொள்வது அவசியமாக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து கோட்டூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தங்கபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டம் என்று சொல்லக்கூடிய பிரதம மந்திரியின் விவசாயிகள் கவுரவ ஊக்கத் தொகை திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக ஒரு தவணைக்கு ரூ.2ஆயிரம் வீதம் மூன்று தவ ணைகளாக ஆண்டுக்கு மொத்தம் ரூ.6ஆயிரம் வழங்கப்படுகிறது.இத்திட்டத்தில் இணைந்து முதல் 2 தவணைகளை பெற்றுள்ள சிறு, குறு விவசாயிகள் மூன்றாவது தவணைத் தொகையை பெறுவதற்கு ஆதார் அட்டையில் உள்ளவாறு தங்களது பெயரினை திருத்தம் செய்து, புதுப்பித்துக் கொள்வது தற்பொழுது அவசியமாக்கப்பட்டுள்ளது.