கம்பம், அக்.10: கம்பத்திலிருந்து கம்பம் மெட்டு வழியாகவும், குமுளி வழியாகவும் தினமும் அதிகாலையில் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு அளவுக்கு அதிகமான ஆட்களை ஏற்றிச் கொண்டு தோட்ட வேலைக்குச் செல்லும் ஜீப்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். தேனி மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு நாளொன்றுக்கு சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஜீப்புகளில் முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் தினக்கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். போடிமெட்டு, கம்பம்மெட்டு மற்றும் குமுளி வழியாக ஆயிரக்கணக்கான ஜீப்புகளில் தினமும் கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். கம்பத்தையொட்டியுள்ள ஆமையார், புத்தடி, புளியமலை, நெடுங்கண்டம், உடும்பன்சோலை ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் ஏலக்காய் பயிரிடப்பட்டுள்ளது. இந்த ஏலத்தோட்டங்களில் கூலி வேலைக்கு கம்பம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கூடலூர், புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி, உத்தமபாளையம், சின்னமனூர், எரசை, குச்சனூர், சீப்பாலக்கோட்டை, காமாட்சிபுரம், கே.கே பட்டி போன்ற ஊர்களிலிருந்து தினந்தோறும் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கேரளாவிற்கு வேலைக்கு சென்று வருகின்றனர்.
கடந்த மாதம் தோட்ட வேலைக்குச் சென்ற ஜீப் ஒன்று போடி மெட்டு அருகே விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகினர். இந்த கோர விபத்தினால் தேனி மாவட்ட காவல்துறையினர், போக்குவரத்து விதிகளை பின்பற்றி அதிகளவில் ஆட்களை ஏற்றிச் செல்லும் ஜீப்புகளுக்கு அபராதம் விதிப்பது, ஜீப்புகளை பறிமுதல் செய்வது என்று கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.