இளையான்குடி, அக்.10: இளையான்குடியில் குடிமராமத்து பணியில் பல லட்சம் முறைகேடு நடந்துள்ளதாக பேரூராட்சி ஆபிசை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இளையான்குடி பகுதியில் நிலத்தடிநீரை சேமிக்கும் நோக்கத்துடன் பொட்டகண்மாய், பண்டுவன் ஊரணி, எலுமிச்சை ஊரணி, மமதா ஊரணி, சாலையூரணி மற்றும் நெசவுப்பட்டறை ஊரணி ஆகியற்றை தூர்வாரும் பணி மும்முரமாக நடைபெற்றது. கரைகளுக்கு போடப்பட்டு மீதமுள்ள மண் தனியார் கல்லூரி, பள்ளி, செங்கல் சேம்பர் ஆகிய இடங்களுக்கு பல லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. விற்பனை செய்யும் மண் குறித்து அப்போதே மக்கள் கேள்வி கேட்டனர். அதற்கு, விற்பனை செய்த தொகையை தூர்வாரும் பணியில் ஈடுபட்ட வாகனங்கள் மற்றும் டீசல் ஆகியவற்றுக்கு செலவு செய்ய உள்ளோம் என தூர்வாரும் குழுவினர் தெரிவித்தனர். இதனால் பொதுமக்கள் சமாதானமாகினர். இந்நிலையில் தூர்வாரும் பணிக்காக பேரூராட்சி ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.