முத்துப்பேட்டை, அக்.2: முத்துப்பேட்டை ஒன்றியத்தில் கடைசி பகுதியில் கடற்கரை ஒட்டி அமைந்துள்ள ஒரு பகுதிதான் .இந்த மேலதொண்டியக்காடு கிராமம். அதிகாரிகளால் புறக்கணிக்கப்பட்டு எந்தவொரு அடிப்படை வசதிகளையும் முறையாக பெறாமல் மிகவும் பின்தங்கிய இந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. இயற்கை சூழலில் இப்பகுதியில் பல ஆண்டுகளாக ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இதில் சுற்றுப்பகுதியை சேர்ந்த ஏழை விவசாயிகள், கூலித்தொழிலாளர்கள், மீனவர்களின் குழந்தைகளான 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். தரமுடன் இருந்த பழமையான ஓட்டு கட்டிடத்தில் இயங்கிய இந்த பள்ளி வளாகத்தில் அங்கன்வாடி மையமும் செயல்பட்டு வந்தது.பள்ளி வளாகத்தில் சத்துணவு மையமும் உள்ளது. கடந்தாண்டு நவம்பர் 15ம் தேதி தாக்கிய கஜா புயலின் போது இந்த பள்ளியின் ஓட்டு கட்டிடம் சேதமானது. பள்ளி வளாகத்தில் பசுமையாக இருந்த மரங்களும் அடியோடு சாய்ந்தது. இதில் ஒட்டு கட்டிடத்தின் ஓடுகள் காற்றில் பறந்தது கட்டிடமும் பல பகுதி சேதமாகியது. இதனால் அருகில் உள்ள மற்றொரு பழமையான கட்டிடத்தில் பள்ளி இயங்கி வந்தாலும் இதில் உள்ள வசதிகள் இல்லாததால் இதையும் அவ்வப்போது பயன்படுத்தும் சூழ்நிலையும் உள்ளது.