மன்னார்குடி, அக். 2: இணைய வழி நேரடி பணம் செலுத்தும் வசதியை அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் ஏற்படுத்தி ஆன்லைன் ஆவண பதிவை எளிமை படுத்த வேண்டும் என மன்னார்குடியில் நடைபெற்ற மன்னை வட்டார நில உரிமையாளர்கள் மற்றும் விற்பனை ஆலோசகர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.மன்னை வட்டார நில உரிமையாளர்கள் மற்றும் விற்பனை ஆலோசகர்கள் சங்க செயற்குழு கூட்டம் மன்னார்குடியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். சங்ககவுரவ தலைவர் ரத்தினகுமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தின் நோக்கங்கள் குறித்து சங்க செயலாளர் கோவிந்தராஜ் பேசினார். கூட்டத்தில், 150 ஆண்டுகள் பெருமை வாய்ந்த மன்னார்குடி நகரில் ஏராளமான கல்விக்கூடங்கள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், வணிக வளாகங்கள் அமைந்துள்ளன. மன்னார்குடியில் மையப்பகுதியில் செல்லும் சாலைகள் வழியாக தினசரி நூற்றுக்கணக்கான் கனரக மற்றும் சுற்றுலா வாகனங்கள் செல்வதால் நகரில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் மாணவ, மாணவிகள் அவதிப்படுகிறார்கள். மேலும் போக்குவரத்து நெருக்கடியால் சாலை விபத்துகள் அதிகரித்துள்ளது. எனவே அரசு ஏற்கனவே அறிவித்த சுற்றுவட்ட புறவழி சாலை திட்டத்தை உடனடியாக துவக்க வேண்டும்.