வானூர், செப். 26: வானூர் தாலுகா மொரட்டாண்டி புறவழிச்சாலையில் அரசு பேருந்துகள் இயங்குவதால் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். சென்னை, திண்டிவனத்திலிருந்து புதுச்சேரி செல்லும் தமிழ்நாடு அரசு பேருந்துகள், விரைவுபேருந்துகள் புதுச்சேரியிலிருந்து திண்டிவனம், சென்னை நோக்கி செல்லும் பேருந்துகள் பெரும்பாலும் திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு வழியாக புதுச்சேரி செல்லாமல் மொரட்டாண்டி- இரும்பை புறவழிச்சாலை வழியாக செல்கின்றன. இதனால் பேருந்துகளுக்காக காத்திருக்கும் பயணிகள் அலைக்கழிக்கப்பட்டு மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். குறிப்பாக மொரட்டாண்டி சுங்கச்சாவடியில் இறக்கிவிட்டு செல்கின்றனர். இவ்வாறு பயணிகளை இறக்கிவிடுவதால் 2 கி.மீ தூரம் பெண்கள் மற்றும் நோயாளிகள் உள்ளிட்ட பயணிகள் அச்சத்துடன் நடந்துவர வேண்டியுள்ளது. இந்த பகுதிகளில் வழிப்பறி நகை மற்றும் பணம் திருடு ஆகியவை அடிக்கடி நடந்த வண்ணம் உள்ளது.