முத்துப்பேட்டை, செப்.10: முத்துப்பேட்டை ஆசாத்நகர் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் அங்கன்வாடி மையம் ஒன்று இயங்கி வருகிறது. இதில் ஆசாத்நகர், ரகுமத் நகர் போன்ற சுற்றுப்பகுதியை 20குழந்தைகள் உள்ளனர். மேலும் குழந்தைகளை பராமரிக்கவும் கல்வி கற்றுக்கொடுக்கவும் ஒரு பணியாளர் மற்றும் ஒரு உதவியாளரும் உள்ளனர். இதற்கு என தனி கட்டிடம் இல்லாததால் பள்ளி தலைமையாசிரியர் அறையை பள்ளி நிர்வாகம் தற்காலிகமாக வழங்கியுள்ளது. மேலும் அதே பகுதியில் உள்ள காலி கட்டிடத்தில் கட்டித்தரவும் போதிய ஆவணங்களுடன் உரிய அதிகாரிகளிடம் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்பொழுது உள்ள இந்த தற்காலிக கட்டிடத்தின் சிலாப், சுவர்கள், படிகள் என கட்டிடத்தின் பல பகுதிகள் விரிசல் ஏற்பட்டு சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்துள்ளது. இதில் அந்த விரிசல் வழியாக மழைநீர் உள்புகுந்து மாதக்கணக்கில் தண்ணீர்கசிவு ஏற்பட்டு குழந்தைகளுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துவதுடன் எந்த நேரத்திலும் மேல் பகுதி சிலாப்பூச்சுக்கள் பெயர்ந்து விழுந்து மிகப்பெரிய பேராபத்தை ஏற்படுத்தும் வகையில் ஆபத்தான நிலையில் உள்ளன.