காஞ்சிபுரம், செப்.10: தையூர் கிராம மக்கள் கலெக்டர் பொன்னையாவிடம் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது.செங்கல்பட்டு வருவாய் கோட்டம் புதுப்பாக்கம் விஏஓவாக பணிபுரியும் பொன்னுதுரை என்பவர், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தையூர் கிராம விஏஓவாக இருந்தார். அப்போது, அவர் அலுவலகத்துக்கு சரியான நேரத்துக்கு வருவதில்லை.மாணவர்களை பள்ளி மற்றும் கல்லூரிகளில் சேர்ப்பதற்காக சாதி சான்றிதழ், முதியோர் பென்ஷன், விதவை உதவித்தொகை பெற மனுவில் கையெழுத்து வாங்க அலுவலகத்தில் பல மணிநேரம் காத்துக் கிடப்போம். விஏஓ பொன்னுதுரை பகல் 12 மணிளவில் அலுவலகத்துக்கு வந்து 2 மணிக்கு திரும்பி சென்றுவிடுவார்.அந்த 2 மணிநேரத்தில்கூட பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க மாட்டார். அலுவலகத்தை திறந்து பைல்களை எடுத்துக் கொண்டு அவசரமாக வெளியே போவதாக கூறிவிட்டு ரியல் எஸ்டேட் மற்றும் அபார்ட்மென்ட் உரிமையாளர்களுடன் சென்றுவிடுவார்.