கடலூர், ஆக. 20: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டக்குழுவினர் கடந்த ஆகஸ்ட் 1 முதல் 15ஆம் தேதி வரை கடலூர் மாவட்டத்தில் கையெழுத்து இயக்கத்தை நடத்தினர். இதில் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், தொழிற்சங்கத்தினர், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் என 49 ஆயிரம் பேர் கையொப்பமிட்டனர். இந்த கையெழுத்துக்களை கடலூர் ஆட்சியர் அன்புசெல்வனிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கடலூர் மஞ்சக்குப்பம் அம்பேத்கர் சிலை அருகில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஊர்வலமாக ஆட்சியர் அலுவலகம் சென்று கையெழுத்துகளை ஒப்படைத்தனர். அத்துடன் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் நிரந்தரமாக தடை செய்து அரசாணை வெளியிட வேண்டும். இத்திட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். காவிரி டெல்டாவை, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை அடங்கிய மனுவும் ஆட்சியரிடம் வழங்கப்பட்டது.