காரைக்குடி, ஆக.14: காரைக்குடி ரயில்வே ஸ்டேசன் பகுதியில் பல கோடியில் கட்டப்பட்ட சப் வேயில் விளக்குகள் அமைக்காததால் இரவு நேரங்களில் மக்கள் செல்ல முடியாத நிலை உருவாகி உள்ளது. காரைக்குடி ரயில்வே ஸ்டேசன் பகுதிக்கு அருகே லட்சுமி நகர், பொன்நகர், நவரத்தினா நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் மக்கள் ஆபத்தான முறையில் ரயில்வே தண்டவாளத்தை கடந்து சென்று வந்தனர். மக்களின் வசதிக்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ரயில்வே நிர்வாகம் சார்பில் பல கோடியில் சப் வே அமைக்கப்பட்டது. மழை பெய்தால் இந்த சப் வே முழுவதும் தண்ணீர் நிரம்பி குளம் போல் மாறிவிடும். தேங்கி கிடக்கும் தண்ணீரை அகற்ற முறையான நடவடிக்கை இதுவரை நிர்வாகம் எடுக்கவில்லை. இந்நிலையில் சப் வே பகுதியில் விளக்குகள் அமைக்காததால் இரவு நேரங்களில் மக்கள் செல்ல முடியாத நிலை உருவாகி உள்ளது. இதனை தங்களுக்கு சாதகமாக்கி கொள்ளும் குடிமகன்கள் இரவு நேரங்களில் பாராக மாற்றி வருகின்றனர். தவிர பாட்டில்களையும் அங்கேயே உடைத்து விட்டு செல்வதால் வாகனங்கள் பஞ்சர் ஆகி விடுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.