செங்கல்பட்டு, ஜூலை 18: செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகளால், நோயாளிகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது என நேற்றைய தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, நேற்று காலை கலெக்டரிடன் உத்தரவின் படி, அங்கிருந்த குப்பைகள் அகற்றப்பட்டன. செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் சுமார் 5 ஆயிரம் பேர் புறநோயாளிகளாகவும், 3 ஆயிரம் பேர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனா். அனைத்து நோய்களுக்கும், இங்கு சிகிச்சை அளிப்பதால், மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இதனால், இந்த மருத்துவமனை எப்போதும் பரபரப்புடன் காணப்படும்.
இந்த மருத்துவமனை வளாகத்தில், எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு அருகே, சிகிச்சையின்போது வெளியேற்றப்படும் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு, மலைப்போல் காட்சியளிக்கிறது. உடனுக்குடன் அகற்றப்படாததால், அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது.இதனால் எலும்பு சிகிச்சை பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, பிசியோதெரபி, காலரா வார்டு ஆகிய பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள், கடும் துர்நாற்றத்தால் கடும் சிரமம் அடைகின்றனர். ஏற்கனவே உள்ள நோய்க்கு சிகிச்சை பெற வந்த தங்களுக்கு, மேலும் கூடுதல் நோய் ஏற்படுமோ என்ற அச்சத்துடன் அங்கு இருக்கின்றனர்.