காஞ்சிபுரம், ஜூலை 18: காஞ்சிபுரம் மாவட்டத்தில் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் பொன்னையா அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசின் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின்கீழ் 10ம் வகுப்பு தோல்வி அடைந்தவர்களுக்கு 200 ரூபாயும், தேர்ச்சி பெற்றவர்களுக்கு 300 ரூபாயும், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 400 ரூபாயும், பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 600 ரூபாயும் மாதந்தோறும் உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
இத்தகுதி பெற்ற வேலைவாய்ப்பற்றோர் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து 5 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் ஓராண்டு நிறைவு செய்திருந்தால் போதுமானது. பதிவினை தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும். எம்பிசி, பிசி (முஸ்லிம்), ஓபிசி.ஓசி வகுப்பினர் 40 வயதுக்கு உட்பட்டவர்களாகவும், எஸ்சி, எஸ்டி, எஸ்சி (அருந்ததியர்) 45 வயதிற்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு வயதுவரம்பு இல்லை.