காஞ்சிபுரம், ஜூலை 16: காஞ்சிபுரம் அத்தி வரதர் விழாவில் பயணிகளிடம் அதிக கட்டணங்களை வசூலிக்கும் ஆட்டோ ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா தெரிவித்ததாவது: அத்தி வரதர் வைபவத்தில் நாள்தோறும் பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது. இதுவரை 15 நாட்களில் சுமார் 18 ஆயிரம் பக்தர்கள் அத்தி வரதரை தரிசித்துவிட்டு சென்றுள்ளனர். வாரந்தோறும், மாவட்ட அதிகாரிகள் கூட்டம் நடத்தி, பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. பகலில் குவிந்த குப்பையை, இரவில், நான்கு மணி நேரத்தில் அகற்றப்படுகிறது. நகரில், 20 மினி பஸ் இயக்கப்பட்டது. தற்போது 30 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 8 மொபைல் ஆம்புலன்ஸ், 10 பைக் ஆம்புலன்ஸ் ஆகியவை, தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் மாற்றுத்திறனாளிகள், முதியோர், கைக்குழந்தை வைத்திருப்போர் வசதிக்காக, ஆன்லைன் சேவை தொடங்கப்பட உள்ளது. இச்சேவை நடைமுறைக்கு வந்ததும், இவர்கள், அத்தி வரதரை விரைவாக தரிசிக்கலாம்.