சீர்காழி, ஜூலை 16: சீர்காழி தாடளான் கோயில் மெயின் ரோட்டில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவு கொண்ட அரியாப்பிள்ளை குளம் உள்ளது. இக்குளத்தால் அப்பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து நல்ல குடிநீர் கிடைத்து வந்தது. மேலும் மழை காலங்களில் பெரும் வடிகாலாகவும் விளங்கியது. குளம் நிரம்பினால் அந்த தண்ணீர் வாய்க்கால் வழியாக வெளியேறும் வகையிலும், குளத்தில் தண்ணீர் குறைந்தால் அதே வாய்க்கால் வழியாக குளத்தை நிரப்பும் வகையிலும் நீர்வழிப்பாதை இருந்து வந்தது ஆனால் காலப்போக்கில் அரியாப்பிள்ளை குளம் ஆக்கிரமிப்பாலும், குப்பைகள் கொட்டப்படுவதாலும் வறண்டு, செடி, கொடிகள் முளைத்து காடுகள் போல் காணப்பட்டு வருகிறது.இந்த குளத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சிலர் தங்களுக்கு சொந்தமென கொண்டாடி குளத்தை பிளாட் போட்டு விற்பனை செய்ய முயன்றனர். இதனை அப்பகுதி மக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பாக பேசப்பட்டதுஇந்நிலையில், மத்திய அரசின் ஜல்சக்தி அபியான் திட்டம் சீர்காழி நகராட்சி பகுதியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நகராட்சி பகுதியில் உள்ள குளங்களில் மூன்று மாதங்களில் நீர் நிரப்புதல், நீர் சேமிப்பு உள்ளிட்டவை செயல்படுத்தப்பட உள்ளன. இதன் மூலம் வரும் காலங்களில் நிலத்தடி நீரை சேமிப்பது தொடர்பாக தொடர்ந்து விழிப்புணர்வும், நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக அரியாப்பிள்ளை குளத்தை தூர்வாரும் பணி நகராட்சி ஆணையர் அஜிதா பர்வின் தலைமையில் தொடங்கியது.