திருவாரூர் ,ஜூன் 27: திருவாரூர் மாவட்டம் குடவாசலில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாமில் 91 பயனாளிகளுக்கு ரூ ஒன்பதரை லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆனந்த் வழங்கினார்.திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகா சிமிழி கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாமானது நேற்று கலெக்டர் ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. இதில் 91 பயனாளிகளுக்கு வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, மகளிர் திட்டம், தோட்டக்கலைத் துறை ஆகிய துறைகளின் சார்பில் ரூ. 9 லட்சத்து 56 ஆயிரத்து 27 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி கலெக்டர் ஆனந்த் பேசியதாவது, பொது மக்களுக்காக மாநில அரசும், மத்திய அரசும் பல்வேறு நலத்திட்டங்களை தீட்டி செயல்படுத்திபடுத்தி வருகிறது. இதில் மத்திய அரசு மூலம் பிரதான் மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் ஆண்டு ஒன்றுக்கு ரூ.6 ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக கூட்டு பட்டாவாகவுள்ள நிலங்களுக்கும் உடனடியாக பட்டா மாறுதல் செய்வதற்கு விண்ணப்பித்தால் ஒரு வாரத்திற்க்குள் பட்டா மாறுதல் செய்து தரப்படும்.