உத்திரமேரூர், ஜூன் 25: முறையாக குடிநீர் வழங்காத அதிகாரிகளை கண்டித்து, காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவம் உத்திரமேரூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தியது. உத்திரமேரூர் அடுத்த இடையம்புதூர் கிராமத்தில் 800க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குள்ள மக்களின் குடிநீர் தேவைக்கு, அதே பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, மின் மோட்டார் மூலம் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் நீர் ஏற்றி, பின்னர் பைப் லைன் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. கடந்த 2 மாதங்களாக, மேற்கண்ட பகுதி மக்களுக்கு முறையாக குடிநீர் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் கிராம மக்கள், தண்ணீருக்காக பல்வேறு இடங்களுக்கு அலைந்து திரிகின்றனர். இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும், எவ்விதநடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.