செய்யூர், ஜூன் 25: சித்தாமூர் ஒன்றியம் அரசூர் கிராமத்துக்கு செல்லும் வழியில் அமைக்கப்பட்டுள்ள தரைப்பாலம், கடும் சேதமடைந்து சாலையில் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் அப்பகுதியை கடந்து செல்கின்றனர். சித்தாமூர் ஒன்றியம் அரசூர் ஊராட்சியில், அரசூர் கிராமத்துக்கு செல்லும் சாலையின் குறுக்கே மழைநீர் வடிகால்வாய் உள்ளது. இந்த கால்வாயை கடந்து செல்வதற்காக, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் தரைப்பாலம் அமைக்கப்பட்டது. ஆனால், தரைப்பாலத்தை அமைப்பதற்காக டெண்டர் எடுத்தவர்கள், தரமில்லாமல் அமைத்ததாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதனால், அந்த தரைப்பாலம் கடந்த சில மாதங்களுக்கு முன், திடீரென சரிந்து விழுந்தது. இதையொட்டி, சாலையின் குறுக்கே பள்ளமும் ஏற்பட்டுள்ளது. இப்பள்ளம் நாளுக்கு நாள் விரிவடைந்து, தற்போது 5அடி அகலம், 5அடி ஆழம் கொண்டு அபாயகரமான மெகா பள்ளமாக மாறிவிட்டது.