மாமல்லபுரம், ஜூன் 21: உலகப்புகழ் பெற்ற சுற்றுலா நகரமான மாமல்லபுரத்தில் அர்ஜூனன் தபசு, கலங்கரை விளக்கம், ஐந்து ரதம், கடற்கரை கோயில் உள்பட ஏராளமான பல்லவர் கால புராதன சின்னங்கள் உள்ளன. இவற்றைக் காண தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் இருந்து ஏராளமான உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும், அக்டோபர் முதல் மார்ச் வரை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்கின்றனர். நாடு முழுவதிலும் உள்ள தாஜ்மகால், செங்கோட்டை, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டைகள் உள்ளிட்ட சுற்றுலாவுக்கு பெயர் போன நகரங்களில் புராதன சின்னங்கள் இரவு நேரங்களில் மின் விளக்குகளால் ஒளியூட்டப்பட்டுள்ளன. இரவு நேரங்களில் வித்தியாசமான ஒளி அமைப்புடன் அவற்றை பார்ப்பதை, சுற்றுலாப் பயணிகள் பெரிதும் ரசித்து பார்ப்பார்கள்.