திண்டிவனம், ஜூன் 12: திண்டிவனம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு மாதத்திற்கு மேலாக அதிக வெப்பத்தின் காரணமாக பல்வேறு இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனைகண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே சாலை மறியல், முற்றுகை உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை பொதுமக்கள் நடத்தி வருகின்றனர். தண்ணீர் பிரச் னையை தீர்க்க நடவடிக்கை எடுக்காத தமிழக அரசை கண்டித்துதிண்டிவனம் அடுத்த ஏப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்டவர்கள் திண்டிவனம்-ஆவணிப்பூர் சாலை நொளம்பூரில் டீசல் கேன் மற்றும் காலி குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இப்பிரச்னை குறித்து தகவல் அறிந்து வந்த ஒலக்கூர் போலீசார் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் தொடர்ந்து பல மணி நேரமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் குடிநீர் பிரச்னையை தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும் தங்கள் ஊரில் ஏற்கனவே அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறு மூடப்பட்டுவிட்டதால் மீண்டும் அதே இடத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க முயன்று வருவதாகவும், ஆனால் அப்பகுதியை சேர்ந்த ஒருவர் தன்னுடைய விவசாய நிலத்தில் நீர் ஆதாரம் பாதிக்கப்படும் என்று கூறி ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவிப்பதால் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டு இரண்டு மாதத்திற்கும் மேலாக குடிநீர் வரவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.