ஆம்பூர், ஜூன் 11: ஆம்பூர் அருகே மகள் காதல் திருமணம் செய்ததால், தனது மகள் இறந்ததுவிட்டதாக தந்தையே பேனர் வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன், பால் வியாபாரி. இவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகள் ஆம்பூர் அருகே உள்ள தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்து வருகிறார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த வாலிபரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த பெண்ணின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், பெற்றோரின் எதிர்ப்பை மீறி இளம்பெண் தொடர்ந்து காதலித்துள்ளார். இதனால் வேதனை அடைந்த அவரது பெற்றோர், மகளை கண்டித்தனர். இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு இளம்பெண் வீட்டைவிட்டு வெளியேறி தனது காதலனை திருமணம் செய்து கொண்டாராம்.