தூத்துக்குடி, ஜூன் 4: கோவில்பட்டி வடக்கு திட்டங்குளம் கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் தங்களுக்கு அரசின் சார்பில் இலவச வீட்டுமனைப்பட்டா அல்லது இலவசமாக அரசு சார்பில் வீடு கட்டிகொடுக்க வேண்டும் என கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர். இதேபோல் தூத்துக்குடி மாவட்டம் புதூர், புதுக்காலனி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில்:
எங்கள் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இப்பகுதி முழுவதும் விவசாயம் சார்ந்த பகுதி, எங்கள் குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை வருவதாக அறிகிறோம். இப்பகுதியில் அங்கன்வாடி, பெட்ரோல் பல்க், கோவில்கள் உள்ளிட்டவையும் அமைந்துள்ளன. இவற்றை தாண்டித்தான் டாஸ்மாக் கடைக்கு செல்லவேண்டிய நிலை உள்ளது.