ஏரல் அருகே பெண்ணிடம் நகை பறித்த 2 பேர் கைது

ஏரல், ஜூன் 4: ஏரல் அருகே தனியார் நிறுவன பெண் ஊழியரிடம் நகைபறித்த 2பேர் கைது செய்யப்பட்டனர். ஏரல் அருகேயுள்ள தீப்பாச்சி கிராமத்தை சேர்ந்தவர் ஆத்திப்பழம் மனைவி பத்மநித்யா (32). இவர் அகரம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 1ம் தேதி மாலை வேலை முடிந்து வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது பைக்கில் பின் தொடர்ந்து வந்த மர்மநபர்கள் 2பேர், பத்மநித்யா அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்துச்சென்றனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் ஏரல் எஸ்.ஐ. முருகன், சிறப்பு எஸ்.ஐ. ஜேக்கப் வில்லியம் மற்றும் காவலர் செந்தில் ஆகியோர் ஏரல் ஆத்துப்பாலம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் வந்த 2பேரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் இருவரும் ஆத்தூர் அருகேயுள்ள புன்னை சாத்தன்குறிச்சி அம்மன்கோயில்தெரு ராமகிருஷ்ணன் மகன் சரவணன்(43) மற்றும் ஆத்தூர் அருகே தெற்கு மாறாந்தலையை சேர்ந்த பூத்துரை(46) என்பதும் இவர்கள் தீப்பாச்சி கிராமத்தில் பெண் ஊழியர் பத்மநித்யாவிடம் நகையை பறித்து சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து திருவைகுண்டம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தூத்துக்குடி பேரூரணி சிறையில் அடைத்தனர்.

Related Stories: