திருவாரூர், மே 30: திருவாரூர்- காரைக்குடி ரயில் பாதையில் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ரயில் சேவை நாளை மறுதினம் முதல் துவங்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி வழியாக காரைக்குடி வரையிலான மீட்டர் கேஜ் ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றுவதற்காக கடந்த 2009ம் ஆண்டில் ரயில் சேவை நிறுத்தப்பட்டு அகல ரயில் பாதைக்கான பணிகள் துவங்கின.இருப்பினும் ஆமை வேகத்தை விட மிகவும் குறைவாக நத்தை வேகத்தில் நடைபெற்று வந்த இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென பொதுமக்களும், சேவை சங்கத்தினரும், அரசியல் கட்சியினரும், விவசாயிகளும் என பல்வேறு தரப்பினரும் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.இது மட்டுமின்றி திருவாரூர் மாவட்ட ரயில் உபயோகிப்பாளர் சங்கம் சார்பில் தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மேலாளர் அலுவலகத்திற்கு நூற்றுக்கணக்கான கோரிக்கை மனுக்களும் அனுப்பப்பட்டன. இதனையடுத்து இந்த பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் கடந்த மார்ச் மாதம் 28ம் தேதி இந்த ரயில் பாதையில் சோதனை ரயில் ஓட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் ஏப்ரல் 1ம் தேதி முதல் ரயில் சேவை தொடங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலை காரணம் காட்டி இந்த ரயில் சேவை துவங்கப்படாமல் இருந்து வந்தது.இதையடுத்து ரயில் உபயோகிப்பாளர் சங்கம் உட்பட பலரும் பல்வேறு கோரிக்கை மனுக்களை மீண்டும் அளித்த நிலையில் நாளை மறுதினம் (ஜூன் 1ம் தேதி) முதல் இந்த ரயில் பாதையில் ரயில் சேவை துவங்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.அதன்படி திருவாரூரிலிருந்து காலை 8.15 மணியளவில் புறப்படும் ரயில் தொடர்ந்து மாங்குடி, மாவூர், திருநெல்லிக்காவல், ஆலத்தம்பாடி, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி வழியாக மதியம் 2.15 மணியளவில் காரைக்குடியை சென்றடைகிறது.பின்னர் மீண்டும் 2.30 மணி அளவில் அங்கிருந்து புறப்படும் இந்த ரயிலானது அதே வழித்தடத்தில் இரவு 8.30 மணியளவில் மீண்டும் திருவாரூர் வந்து சேருகிறது.