நாகர்கோவில், மே 29 : நாகர்கோவிலில் திருடிய பணத்தில் பங்கு கேட்டதால் வாலிபரை அடித்து கொன்று அவரது கூட்டாளி நாடகமாடியது தெரிய வந்துள்ளது. நாகர்கோவில் கோட்டார் மறவன்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (28). இவர் மீது திருட்டு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இவர் அடிக்கடி குடிபோதையில் தகராறு செய்து போலீசாரிடம் சிக்குவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 22ம்தேதி நாகர்கோவில் வடசேரி பாலமோர் ரோட்டில் கலைவாணர் கலை அரங்கம் எதிரில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட சித்ரா இந்து மத நூல் நிலைய கலையரங்க வராண்டாவில் முகத்தில் காயங்களுடன் சிவக்குமார் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது அருகில் கருங்கல் தொலையாவட்டத்தை சேர்ந்த ஜாண்(48) என்பவர் படுகாயங்களுடன் கிடந்தார். வடசேரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று காயங்களுடன் கிடந்த ஜாணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிவக்குமார் உடலை பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். மது அருந்தியதில் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்து இருக்குமா? அல்லது பணம் பங்கீடு விவகாரம் உள்ளிட்ட வேறு பிரச்னைகளில் கொலை செய்து இருப்பார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடந்தது. ஜாணிடம் நடந்த விசாரணையில் நாங்கள் 4,5 பேர் சேர்ந்து மது அருந்தினோம். அப்போது போதையில் ஏற்பட்ட தகராறில் மாறி, மாறி தாக்கினார்கள். இதில் சிவக்குமாரை தாக்கி கொலை செய்தது யார்? என்பது எனக்கு தெரியாது என்றார். ஜாண் கூறுவது உண்மை தானா? என போலீசார் விசாரணையை தொடங்கினர். வடசேரி பஸ் நிலையத்தில் போதையில் சுற்றி திரியும் சிலரை பிடித்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது சிவக்குமாரும், ஜாணும் சேர்ந்து சம்பவ தினத்துக்கு முதல் நாள் இரவு ஒன்றாக சுற்றி திரிந்ததும், தியேட்டர் ஒன்றுக்கு படம் பார்க்க சென்றதும் தெரிய வந்தது.