ஆரல்வாய்மொழி, மே 28: பாசனத்திற்காக அணையில் இருந்து தோவாளை சானல் வழியாக வரும் தண்ணீர் மூலம் ஆரல்வாய்மொழி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அதிகமான குளங்கள் நிரப்பப்பட்டு அதன் மூலம் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெற்று வருகின்றன. ஆனால் தோவாளை சானலின் கரை பகுதியானது பெரும்பாலான இடங்களில் சேதமடைந்து மண் அரிப்பு ஏற்பட்டு உடையும் நிலையில் உள்ளது. இதனை பராமரிக்க வேண்டிய பொதுப்பணித் துறை இதனை கண்டுகொள்ளாமல் விட்டு விடுகின்றனர். குறிப்பாக செண்பகராமன்புதூர் - தோவாளை சாலை அருகே வடக்கு மலையில் இருந்து வருகின்ற உப்பாத்து ஓடை செல்கின்றது. இந்த ஓடையின் மேல் பாலம் அமைக்கப்பட்டு அதில் தோவாளை சானல் செல்கின்றது. இந்நிலையில் இப்பாலத்தின் விரிசல் ஏற்பட்டு தண்ணீர் கசிவு ஏற்பட்டு எப்போது வேண்டுமானாலும் உடையும் சூழ்நிலை உள்ளது. எனவே விவசாய சங்கத்தினர் இதனை சரிசெய்ய வேண்டும் என பல முறை மனுக்கள் கொடுத்தும் இதுவரை அதிகாரிகள் எந்த வித நடவடிக்கை எடுக்கவில்லை. அது போன்று தோவாளை அருகே இச்சானலின் பக்க சுவர்கள் பல இடங்களில் உடைந்து சாலையில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நாகர்கோவில் - தோவாளை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து தோவாளை-செண்பகராமன்புதூர் இணைப்பு சாலை துண்டிக்கப்பட்டு தண்ணீர் வெளியேறி விவசாய நிலங்கள் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.