தாம்பரம், மே 25: தாம்பரம் நகராட்சி 23வது வார்டில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் பல மாதங்களுக்கு முன், பாதாளசாக்கடை பணிகள் துவங்கப்பட்டு, நீண்ட இழுபறிக்கு பின், கடந்த சில மாதங்களுக்கு முன் அந்த பணிகள் முடிந்தன.
ஆனால், இப்பணிக்காக உடைக்கப்பட்ட சாலை இதுவரை சீரமைக்கவில்லை. மேலும், சாலையின் ஒருபுறம் புதிதாக கட்டிய மழைநீர் கால்வாயும், அரைகுறையாக விட்டுவிட்டனர்.மேலும், கால்வாய் கட்டாமல், அதற்குள் சாலை அமைக்க ஜல்லிகளை கொட்டி அதன்மீது கிரஷர் மண்ணை கொட்டிவிட்டனர். கால்வாயை முழுமையாக கட்டி முடித்து விட்டு பின்னர் சாலை அமைத்தால் சரியாக இருக்கும். ஆனால், சாலையை அமைத்துவிட்டு, கால்வாய் பணிகளை செய்தால், மீண்டும் சாலைக்கு பாதிப்பு ஏற்படும். இதுபற்றி நகராட்சி உதவி பொறியாளர் நளினியிடம், பொதுமக்கள் கூறினர். ஆனால் அவர், கண்டுகொள்ளாமல் இருப்பதாக புகார் அளிக்கின்றனர்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இப்பகுதியில் பாதாள சாக்கடை பணி கடந்த ஆண்டு துவங்கி,சில மாதங்கள் கிடப்பில் போட்டனர். இதுபற்றி ‘‘தினகரன்’’ நாளிதழில் படத்துடன் செய்தி வெளிவந்தது. இதனால், மீண்டும் அந்த பணிகளை துவங்கி கடந்த சில மாதங்களுக்கு முன் முடித்தனர். ஆனால் நகராட்சி அதிகாரிகள் இதுவரை சாலை பணிகளை ஆய்வு செய்யவில்லை.