விருத்தாசலம், மே 25: விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகேயுள்ள ராஜேந்திரப்பட்டினம் ஊராட்சியில் சுமார் 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். விருத்தாசலம்- கும்பகோணம் நெடுஞ்சாலையில் உள்ள இக்கிராமத்தில் நெடுஞ்சாலையோரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் கூடுதல் கட்டிடம் நெடுஞ்சாலையின் அடுத்த பகுதியில் உள்ளதால் பள்ளி மாணவர்கள் தினந்தோறும் இந்த நெடுஞ்சாலையை கடந்து பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. மேலும் ராஜேந்திரப்பட்டினத்தின் பேருந்து நிறுத்தம் இங்கு உள்ளதால் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அப்பகுதியில் சாலையை கடந்து சென்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையிலும், வாகன ஓட்டுனர்கள் தெரிந்து கொள்ளும் வகையிலும், போக்குவரத்து போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலையின் இருபுறங்களிலும் விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.