தாம்பரம்: தாம்பரம் நகராட்சி பகுதிகளில் துப்புரவு பணிகள் சரிவர நடைபெறாததால், ஆங்காங்கே குப்பைகள் தேங்கியுள்ளது. இதனால், கடும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. தாம்பரம் நகராட்சியில் மொத்தம் 39 வார்டுகள் உள்ளன. இங்கு, ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் துப்புரவு ஊழியர்கள் சரிவர குப்பை கழிவுகளை அகற்றுவது இல்லை. குறிப்பாக, 20வது வார்டு பகுதியில் ஆங்காங்கே குப்பை குவியலாக காட்சியளிக்கிறது. மேலும், பொதுமக்கள் குப்பை கொட்டுவதற்கு தொட்டிகள் இல்லாததால், குப்பை கழிவுகளை சாலை ஓரமும், சாலை ஓரம் உள்ள காலி இடங்களிலும் கொட்டும் நிலை உள்ளது.
கிழக்கு தாம்பரம், பொன்னியம்மன் கோயில் தெருவில் சாலையோரம் உள்ள காலி இடங்களில் அதிகப்படியான குப்பைகள் குவிந்துள்ளதுடன், சாலையிலும் பரவியும் உள்ளது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் உற்பத்தியாகி கொசுத் தொல்லை அதிகரித்துள்ளது.