பல்லாவரம், மே 23: சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம், குன்றத்தூர் ஆகிய பகுதிகளில் விதிகளை மீறும் பைக் மற்றும் நான்கு சக்கர வாகனங்களால் விபத்துகள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து காவலர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், கண்டும் காணாமல் அலட்சியமாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது.பைக் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை வாங்கும்போது, அதற்கு அரசு நிர்ணயித்துள்ள சில சாலை விதிகளை வாகனத்தின் உரிமையாளர் பின்பற்ற வேண்டும் என்ற விதி உள்ளது. உதாரணமாக வாகனத்தின் நம்பர் குறிப்பிட்ட உயரம் மற்றும் அகலத்தில், கருப்பு, வெள்ளை நிறத்தில் எழுத வேண்டும்.அதேபோல் கார், லாரி உள்ளிட்ட வாடகை வாகனங்களாக இருந்தால் மஞ்சள் நிற நம்பர் பிளேட்டில், கருப்பு நிறத்தில் எழுத்துக்கள் இடம் இருக்க வேண்டும். அவ்வாறு எழுதப்படும் வாகன எண், தெளிவாகவும் துல்லியமாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் ஏதேனும் குற்றச் செயல்கள் நடந்தால், வாகனத்தின் எண்ணை வைத்து, அதன் உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க முடியும்.ஆனால் தற்போது பெரும்பாலான வாகன ஓட்டிகள், தங்களது வாகனங்களில் அரசு விதிகளின் படி, நம்பரை எழுதுவது கிடையாது. நம்பர் தெளிவில்லாமல் எழுதுவது அல்லது நம்பர் பிளேட்டில் படம், பெயர் உள்ளிட்டவற்றை வரைகின்றனர். இதனால் குற்றச் செயல்கள் நடக்கும்போது, உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறுகின்றனர்.
அதேபோல் கார்களில், உள்ளே இருப்பவர்கள் வெளியில் தெரியாதபடி, கருப்பு நிற கூலிங் ஸ்டிக்கர்கள் கண்ணாடியில் ஓட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு ஒட்டுவது தண்டனைக்குரிய குற்றம் என கூறி, கடந்தாண்டுகளில் போக்குவரத்து போலீசார், விதிமீறல்களில் ஈடுபட்ட வாகனத்தின் உரிமையாளர்களிடம் அபராதம் வசூலித்தனர்.தற்போது போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் போலீசார் கண்டுகொள்ளாமல் இருப்பதால், விதிகளை மீறாமல் இருந்த வாகன ஓட்டிகள் சிலர், மீண்டும் தங்களது கார்களில் அடர் கருப்புநிற ஸ்டிக்கரை ஒட்டி வலம் வருகின்றனர். இதனால் ஆள்கடத்தல் மற்றும் பலாத்காரம் உள்ளிட்ட குற்றச் செயல்கள் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.தற்போது பெருகி வரும் குற்றச்செயல்களை கருத்தில் கொண்டு, பைக் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் தெளிவான நம்பர் பிளேட் மற்றும் உள்ளிருக்கும் ஆட்கள் வெளியில் தெரியும் வகையில் கார்களில் கருப்பு பிலிம் ஒட்டாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம், குன்றத்தூர் ஆகிய பகுதிகளில் இதுபோன்று அரசு விதிகளை மீறுவது அதிரித்துள்ளது. எனவே வாகன உரிமையாளர்கள் மீது அபராதம் மற்றும் சிறை தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் விதிப்பதன் மூலம் பெருகி வரும் குற்றச்செயல்களை ஓரளவு தடுக்க முடியும் என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.பெருகி வரும் குற்றச்செயல்களை கருத்தில் கொண்டு பை மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் தெளிவான நம்பர் பிளேட் மற்றும் உள்ளிருக்கும் ஆட்கள் வெளியில் தெரியும் வகையில் கார்களில் கருப்பு பிலிம் ஒட்டாதபடி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.