கூத்தாநல்லூர், மே 22: கூத்தாநல்லூர் அருகே உள்ள லெட்சுமாங்குடியில் உள்ள அரசுப்பள்ளி குடிமகன்களின் கூடாரமாக மாறி வருவதற்கு கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். காவல் துறையினரும், கல்வித்துறையும் உடனடியாக தலையிட்டு பள்ளி வளாகத்தில் அத்துமீறும் சமூக விரோதிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளனர். கூத்தாநல்லூர் அருகே உள்ளது லெட்சுமாங்குடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி. மன்னார்குடி ஒன்றியத்தை சேர்ந்த இந்த பள்ளியில் சுமார் 40க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இரண்டு ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். வெறும் எட்டு மாணவர்கள் மட்டுமே படித்து வந்த இந்த துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் உதவியாசிரியரின் அயராத உழைப்பினாலும், கல்வி கற்பிக்கும் முறைகளினாலும் இன்று 40 மாணவ மாணவிகள் வரை எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது என்று பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் பள்ளி மூடப்பட்டுள்ளது. இந்த பள்ளியைச்சுற்றி காம்பவுன்ட் சுவர் இல்லாததை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி மாலை நேரங்களில் சிலர் இந்த பள்ளி வகுப்பறைகளுக்கு முன்னால் அமர்ந்து மது அருந்தி வருகின்றனர். அருகருகே குடியிருப்பு பகுதிகள் உள்ள இந்த பள்ளியில் அமர்ந்து, மது குடிப்பவர்களின் செயலால் பலர் மாலை நேரங்களில் வீட்டை விட்டே வெளியே வரவே அச்சப்படுகின்றனர்.