விருத்தாசலம், மே 21: சம்பளம் வழங்காததை கண்டித்து விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகத்தை நூறுநாள் வேலை திட்ட பயனாளிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. விருத்தாசலம் அருகே உள்ள புதுக்கூரைப்பேட்டை ஊராட்சியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் நூறு நாள் வேலைத்திட்டம் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட பயனாளிகள் வேலை செய்து வருகின்றனர். அவ்வாறு வேலை செய்து வந்த பயனாளிகளுக்கு கடந்த 5 மாதமாக சம்பளம் வழங்காமல் ஊராட்சி நிர்வாகம் இழுத்தடிப்பு செய்து வந்தது. இதுகுறித்து ஊராட்சி செயலரிடம் பலமுறை கேட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. மேலும் இதுகுறித்து விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் ஐந்து மாதங்களாக மனு கொடுத்தும் இதுநாள் வரை சம்பளம் வழங்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட பயனாளிகள் நேற்று விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து சார் ஆட்சியர் பிரசாந்த் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி முறையாக மனு அளிக்குமாறு கூறினார்.