சத்தியமங்கலம், மே 14: தாளவாடி நகர் பகுதியில் 70 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதித்த முதியவரை கிழிந்த உடை,தாடியுடன் சுற்றி திரிந்துள்ளார். தாளவாடி சாலை ஓரங்களில் படுத்து கொள்வதும், ரோடுகளில் பசியோடு கிழிந்த உடையுடன் சுற்றி திரிவதுமாக கடந்த 2 மாதமாக இருந்துள்ளார். அந்த நபரை பற்றி எவரும் கவலைப்படவில்லை. இந்நிலையில் பாதிக்கப்பட்ட அவரை பற்றி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விசாரித்தனர்.
அவர் மனநலம் பாதிக்கப்பட்ட, ஆதரவற்ற நபர் என்பதை அறிந்த தாளவாடி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் குரு, அந்தோணிராஜ், இளையராஜா, நாகராஜ் ஆகியோர் அந்த நபர் இருக்கும் இடம் சென்றனர். அவரது கிழிந்த ஆடைகளை எல்லாம் அப்புறப்படுத்தி அந்த நபரை குளிக்க வைத்து புதிய உடைகள் அணிவித்து மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு அங்கு போதிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவரது மேல் சிகிச்சைக்காகவும் அவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். கடந்த 2 மாதமாக மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில் சுற்றி திரிந்த நபரை யாரும் கண்டு கொள்ளாத நிலையில், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவரை மீட்டு குளிக்க வைத்து, புதிய உடைகள் அணிவித்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்த செயலை பொதுமக்கள் பாராட்டினர்.