ஈரோடு, மே 7: கோவை மண்டல ஆர்எஸ்எஸ் வருடாந்திர பன்முக பயிற்சி கூட்டம் ஈரோட்டில் ஏப்ரல் 27ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் கோவை மண்டலத்தை சேர்ந்த ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்நிலையில், இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக அந்த அமைப்பின் அகில இந்திய தலைவரான மோகன் பகவத் நேற்று காலை பெங்களூரூ-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலில் இசட் பிளஸ் பாதுகாப்புடன் ஈரோடு ரயில்வே ஜங்ஷன் வந்தார். பின்னர் ஈரோடு டவுன் டிஎஸ்பி ராதாகிருஷ்ணன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் மோகன் பகவத்தை ஜங்ஷனுக்கு வெளியில் அழைத்து வந்தனர். பின்னர் ரயில்நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி குண்டு துளைக்காத புல்லட் புரூப் காரில் புறப்பட்டு சென்றார்.